Monday, November 9, 2009

ஆலய தரிசனம் - பயணக்கட்டுரை - பாகம் 1


என் அருமை அன்பர்களே ! எனது குடும்பத்தாருடன் நான் சமீபத்தில் (29 அக்டோபர் 2009 --- 03 நவம்பர் 2009) சென்று வந்த திருத்தலச் சுற்றுலாப் பயணத்தின் சுவையான அனுபவங்களை உங்களிடையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலில் நாங்கள் சென்ற இடங்களை கீழே பட்டியலிடுகிறேன், பிறகு எங்களின் இனிமையும் சாகசங்களும் நிறைந்த‌ பயணத்தினை விவரிக்கிறேன்.

வழிபட்ட திருத்தலங்கள் :-

01) அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
02) அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
03) அருள்மிகு சங்கரலிங்க சுவாமி கோயில், சங்கரன்கோவில், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
04) அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
05) அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
06) அருள்மிகு கள்ளபிரான்சுவாமி திருக்கோயில் (நவதிருப்பதி - சூரிய‌ன் தலம்), ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
07) அருள்மிகு ஆதிநாதர் திருக்கோயில் (நவதிருப்பதி - குரு தலம்), ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
08) அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் (நவதிருப்பதி - செவ்வாய் தலம்), திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
09) அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் (நவதிருப்பதி - சுக்ரன் தலம்), தென்திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
10) அருள்மிகு விஜயாஸனர் திருக்கோயில் (நவதிருப்பதி - சந்திரன் தலம்), நத்தம்(திருவரகுணமங்கை), தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
11) அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில் (நவதிருப்பதி - புதன் தலம்), திருப்புளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
12) அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில் (நவதிருப்பதி - இரட்டைத் திருப்பதி - கேது தலம்), திருத்தொலைவில்லி மங்கலம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
13) அருள்மிகு தேவர் பிரான் திருக்கோயில் (நவதிருப்பதி - இரட்டைத் திருப்பதி - ராகு தலம்), திருத்தொலைவில்லி மங்கலம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
14) அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில் (நவதிருப்பதி - சனி தலம்), பெருங்குளம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
15) அருள்மிகு சொக்கலிங்கசுவாமி திருக்கோயில், ஏர‌ல், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
16) அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
17) அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
18) அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
19) அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
20) அருள்மிகு முன்னூற்றி நங்கை அம்மன் திருக்கோயில், சுசீந்திரம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
21) அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், குருவாயூர், திருச்சூர் மாவட்டம், கேரளா.
22) அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், குருவாயூர், திருச்சூர் மாவட்டம், கேரளா.
23) அருள்மிகு மம்மியூர் மகாதேவன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர் மாவட்டம், கேரளா.
24) அருள்மிகு குருவாயூரப்பன் திருக்கோயில், குருவாயூர், திருச்சூர் மாவட்டம், கேரளா.
25) அருள்மிகு பரமேக்காவு பகவதி அம்மன் திருக்கோயில், திருச்சூர், திருச்சூர் மாவட்டம், கேரளா.
26) அருள்மிகு வடக்குநாதர் திருக்கோயில், திருச்சூர், திருச்சூர் மாவட்டம், கேரளா.


மற்ற இடங்கள் :-

01) அகத்தியர் அருவி, பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
02) மையக்(பெரிய) குற்றால அருவி, குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
03) விவேகானந்தர் பாறை, கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.
04) திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு.



எங்களுடைய‌ பயண அனுபவங்களை ஆரம்பிப்பதற்கு முன், முதலில் இந்தப் பயணத்திற்கு காரண காரணிகளாக அமைந்த சிலவற்றைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்.


ஒரு நாள் நான் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னுடன் முதுகலைப் பட்டப்படிப்பு படித்த நண்பன் ஒருவனிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதனை திறந்து பார்த்தபோது அவனது திருமண அழைப்பு அதிலிருந்தது. இப்போது நாங்கள் சென்று வந்த சுற்றுலாவிற்கு இதுதான் மூல காரணம். திருமணம், திருநெல்வேலியில் 'பேட்டை' என்கிற ஒரு இடத்தில் நவம்பர் ஒண்ணாந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கவிருப்பதாக அழைப்பிதழில் இருந்தது. முன்னதாகவே இரயிலில் முன்பதிவு செய்ய முடிவு செய்தேன். சனிக்கிழமை எனக்கு அலுவலகம் விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலையே கிளம்பிவிடுவதற்காக‌ அந்த தேதியில் சென்னையிலிருந்து திருநெல்வேலி மார்க்கமாகப் புறப்படும் இரயிலில்களில் பயணச்சீட்டு உள்ளதா என்று சோதித்துப்பார்த்தேன். எந்த இரயிலிலும் இடமில்லை. பேருந்தில் இடம் கிடைக்கும் என்றாலும், அவ்வளவு நேரம் அதில் பயணம் செய்யவும் விருப்பமில்லை. அதனால் ஒரு நாள் முன்னதாகவே திருநெல்வேலிக்குச் சென்று திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதாய் முடிவு செய்தேன். அப்படியே திருநெல்வேலியைச் சுற்றியுள்ள சில இடங்களுக்கும் பார்த்து வரலாமென நினைத்து இணையத்தில் தேடுதல் வலையினை விரித்தேன். அதன் பலனாய் சுற்றிப்பார்க்க பல இடங்கள் வந்து குவிந்தன. அதில் முக்கியமான சில இடங்களை குறித்துக்கொண்டு, திருநெல்வேலியையும் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள இடங்களையும், அங்குலம் அங்குலமாய் அளந்து வைத்திருக்கும் என்னுடைய நண்பரின் உதவியோடு ஒரு மாதிரித் திட்டத்தை வடிவமைத்தேன். இந்த நிமிடம் வரை நான் மட்டும் தனியாக திருமணத்திற்குச் செல்வதாகத்தான் இருந்தது. பிறகு என்னுடன் பணிபுரியும் எனது நண்பரையும் அழைத்துச்செல்லலாமென நினைத்து அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவருக்கு அந்த நாளில் வேறொரு வேலை இருப்பதாகவும், என்னுடன் வரமுடியாத நிலையையும் எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்லாது, என்னை எனது வீட்டில் பேசி குடும்பத்தினரை ஊருக்கு அழைத்துச்சென்று சுற்றிப்பார்த்து வரும்படி வற்புறுத்தினார். அதுதான் எனது குடும்பத்தோடு இன்று நான் சென்று வர காரணமாக இருந்த நிமிடங்கள்.


நாங்கள் குடும்பத்தோடு செல்லும் ஒரே இடம், நாகை மாவட்டம் ஆடுதுறை பக்கத்திலுள்ள எங்கள் குலதெய்வக் கோயில்தான். அதைவிட்டால், திருப்பதி. இதைத்தவிர நாங்கள் வேறெங்கும் சென்றதில்லை. என்னுடைய அப்பா இவ்வாறெல்லாம் வெளியூர் சென்று சுற்றிப்பார்ப்பதிலெல்லாம் நாட்டமில்லாதவர். அதனால் தயங்கியபடியே அப்பாவிடம் இந்தத் திட்டத்தைச் சொல்லி ஊருக்கு வரக்கேட்ட எனக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. என்ன நினைத்திருந்தாரோ என்னவோ, கேட்டவுடனேயே வருவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். பிறகு அம்மாவிடமும், தங்கயிடமும் விடுப்பு எடுக்கச் சொல்லிவிட்டு, திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து அக்டோபர் இருபத்தொன்பதாம் தேதி மாலை பயணத்தைத் தொடங்கினோம்.



29-அக்டோபர்-2009 (வியாழக்கிழமை)


அலுவலக வேலைகளை முடித்துவிட்டு ஐந்து மணிக்கு வீட்டிற்குச் சென்றேன். மாலை 6:50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் நாகர்கோவில் விரைவுவண்டியில் நாங்கள் ஏற வேண்டும். வீட்டில், அம்மாவும் தங்கையும் இரவு சாப்பிடுவதற்கு தயிர்சாதம் கட்டிக்கொண்டிருந்தார்கள். எனது துணிமணிகளை அவசர அவசரமாக எடுத்து வைத்துக்கொண்டு, மதியம் அலுவலகத்துக்கு கட்டிச் சென்ற சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எல்லோரும் வீட்டை விட்டுக் கிளம்பினோம். அப்போதே மணி 5:45 ஆகியிருந்தது. பின்னர் எங்கள் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஒரு வினாயகர் கோயிலில், எந்தத் தடங்கலும் இல்லாமலிருக்க இறைவனை வேண்டி, அப்பா சூரைத்தேங்காயை உடைக்கும்போது, கோயில் அருகே உள்ள மரத்தின் மேலிருந்த‌ காகம் ஒன்று எனது இடது கையில் எச்சமிட்டது. அம்மா, என்னவோ ஏதோவென்று மனம் சஞ்சலப்பட, அவர்களை சமாதானப்படுத்தி, பக்கத்திலிருந்த வீட்டில் கை கழுவிவிட்டு, ஆட்டோவில் ஏறி மாம்பலம் இரயில் நிலையத்திற்கு விரைந்தோம். ரங்கநாதன் தெருவின் கூட்டத்தில் சிக்கி பயணச்சீட்டினை வாங்கிக்கொண்டு மின்சார ரயிலில் ஏறுவதற்குள்ளாகவே போதும் போதுமென்று ஆகிவிட்டது. ஒருவழியாக எழும்பூருக்கு வந்த சேர்ந்த பின்புதான் 'அப்பாடா' என்றிருந்தது. 6:50 மணிக்கு புறப்பட வேண்டிய இரயில் அப்போதுதான் நடைமேடைக்கே வந்து சேர்ந்தது. அதிலும் எந்தப் பெட்டியிலும் எண்கள் குறிப்பிடப்படவில்லை. அதனால் வண்டி வந்தபிறகும் அதில் ஏற முடியாமல் எல்லோரும் நடைமேடயிலேயே காத்திருந்தோம். ஐந்து நிமிடம் கழித்து ஓடி வந்த ஒருவர், 'எஸ் 5' என்ற தாளை ஒட்டியதுதான் தாமசம், அனைவரும் முண்டியடித்துக்கொண்டு அந்தச் சிறிய வழியில் ஏறிச் செல்ல போராடிக்கொண்டிருந்தனர். நாங்கள் கூட்டம் கொஞ்சம் குறையும்வரை வெளியிலேயே இருந்தோம். எல்லோரும் ஏறாதவரை வண்டியை எடுக்க மாட்டார்கள் என்றாலும், கண்கள் அவ்வப்போது இரயிலுக்கு விடைகொடுக்கும் விளக்கு இருக்கும் திசையினை நோக்கிச் சென்றுகொண்டுதானிருந்தது. கூட்டம் சற்று குறைந்ததும் உள்ளே ஏறி எங்களது இருக்கைக்குக் கீழே, நாங்கள் எடுத்து வந்த பைகளை உள்ளுக்குத் தள்ளிவிட்டு அமர்ந்தோம். பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை, நாங்கள் வசிக்கும் தியாகராயநகர் அருகிலுள்ள சைதாப்பேட்டைக்குக் கூட தனியாக செல்லத் தெரியாத எனக்கு, என்னை மட்டுமே முழுக்க நம்பி இடம் தெரியாத ஊருக்கு என்னுடன் வந்துகொண்டிருக்கும் எனது குடும்பத்தாரை நினைக்கும்போது வியப்பாகத்தான் இருந்தது, சிரிப்பும் வந்தது. ஆனாலும், எப்படியும் திட்டமிட்டபடி எல்லாவற்றையும் முடித்துவிட்டு நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆழ்மனதில் ஓங்கியிருந்தது.

நாங்கள் செல்லும் இரயில் நாகர்கோயிலுக்கு விடப்பட்டுள்ள சிறப்பு வண்டி என்பதால், இது எப்போதுமே மிகவும் காலதாமதமாகத்தான் செல்லும் என்று என்னிடம் பலரும் சொல்லியிருந்தனர். அதற்கேற்றார்போலவே, பத்து நிமிட காலதாமதத்துடன், சரியாக ஏழு மணிக்கு எழும்பூரை விட்டுக்கிளம்பியது, நாங்கள் பயணம் செய்த இரயில். ஆரம்பமே அசத்தல்தான் என்று மனதுக்குள் எண்ணியவாறே, நாங்கள் இறங்கவேண்டிய விருதுநகருக்கு இந்த வண்டி எவ்வளவு மணிநேரம் காலதாமதமாகச் செல்லப்போகிறதோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரயில் சற்று வேகம் எடுக்கத் தொடங்கியது. இஞ்சி தின்ன குரங்கைப்போல் இருந்த எங்கள் அனைவரின் முகத்திலும் சந்தோஷம் மலரக் காரணமாக இருந்தது, எங்களின் அருகில் இருந்த ஒரு பிஞ்சுக் குழந்தையின் செல்லக் குறும்புதான்.


குழந்தை என்றாலே குறும்புதானே ... அந்தக் குழந்தையின் மழலைப் பேச்சையும் அது செய்யும் சேட்டையையும், ரசித்துக் கொண்டே இருந்தோம். ரொம்பவே ரசித்துவிட்டோம் போல ... அதுதான் வயிறு பசிக்கத் தொடங்கியது. பால் பாக்கெட்டுகளில் எடுத்து வந்திருந்த தயிர்சாதத்தினை சாப்பிடுவது அவ்வளவு வாகாக இல்லை. இருந்தாலும் ஏதோ சாப்பிட்டுவிட்டு இரவு 9:45 மணிக்கு விழுப்புரம் வந்தவுடன் படுத்தோம். காலையில் சீக்கிரமே எழுந்து விட வேண்டும் என்பதால், காலை நான்கு மணிக்கு அடிக்குமாறு அலாரம் வைத்துவிட்டு, தூக்கம் வரவில்லையென்றாலும் படுத்துவிட்டோம்.

படுத்துக் கண்ணயர்ந்த அரைமணிநேரத்திலேயே திடீரென்று பேய் மழை சடசடவென கொட்டத் தொடங்கியது. நாங்கள் நான்கு பெரும் படுத்திருந்தது சன்னலருகே என்பதால், உறக்கத்திலிருந்து எழுந்து சற்று சுதாரித்துக்கொள்வதற்குள்ளாகவே, மழை நீர் உள்ளே வந்து கொஞ்சம் நனைத்துவிட்டது. அடித்துப்பிடித்து எழுந்து சன்னலை மூட முயற்சி செய்தால், அதனை முழுவதுமாக மூடவும் முடியவில்லை. போராடியபின்னும் சன்னலை மூட முடியாமற்போன அந்த நிமிடங்கள், மனதில் சற்று எரிச்சலை உண்டுபன்னிவிட்டுத்தான் போனது. அந்நியன் 'அம்பி'யைப் போல, 'டிடிஆர்' என்று எழுந்து நின்று கத்தவேண்டும் போலிருந்தது. சன்னலை மூட மீண்டும் கடுமையாக முயற்சி செய்தேன். அதற்குள் பாதி நனைத்துவிட்ட சந்தோஷத்தில், அதுவே போதுமென்று மழையே நின்று போய்விட்டது. ஈரத்தை ஒரு சிறு துணியால் துடைத்துவிட்டுப் போய் படுத்தோம். கதவுடன் போராடிய களைப்பில் தூக்கமும் உடனே வந்துவிட்டது.



30-அக்டோபர்-2009 (வெள்ளிக்கிழமை)


காலை 3:45 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. எழுந்து சென்று டிடிஆரிடம் சென்று கேட்டவுடன்தான் தெரிந்தது, இன்னும் மதுரை கூட வரவில்லையென்று. சற்று நேரம் கதவருகே ஒய்யாரமாய் நின்று காற்று வாங்கிவிட்டு, பல் துலக்கி முடிக்கவும், மதுரை சந்திப்பில் வண்டி சென்று நிற்கவும் சரியாக இருந்தது. அங்கே ஒரு காபியை வாங்கிச் சுவைத்தேன். பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்தார்களா, இல்லை தண்ணீரில் சிறிதளவு பாலை ஊற்றினார்களா என்று தெரியாத அளவிற்கு அந்த காபி இருந்தது. ஐந்து ரூபாய் கொடுத்து வாங்கிய காபியை கீழே கொட்ட மனமில்லாமல், தண்ணீராக இருந்தாலும் அதை வெண்ணீரென நினைத்து குடித்து முடித்தேன். இரயில் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தாமதமாக விருதுநகர் வந்தடைந்தது. என்னுடைய திட்டப்படி, விருதுநகரிலேயே குளித்துவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்வதாகத்தான் இருந்தது. ஆனால் நாங்கள் சென்றது அதிகாலை என்ற‌தால் அங்குள்ள‌ விடுதிகள் பற்றி யாரிடமும் சரியாக விசாரிக்கக்கூட முடியவில்லை. நாங்கள் குளித்துவிட்டு உடனே ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றாக வேண்டும். அதனால் குளிப்பதற்கு மட்டும் எங்காவது இடம் கிடைக்குமா என்று பார்த்தோம். அந்த ஊரில் தண்னீருக்குத் தட்டுப்பாடு என்பதால், விடுதிகளில் குளிப்பதற்கு மட்டும் அறைகள் கிடைக்காது என்றும், ஒரு நாள் முழுவதற்குமான வாடகைதான் வாங்கப்படும் என்று தெரியவந்தது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் கோயிலருகிலேயே ஏதாவது ஒரு விடுதியில் குளித்துவிடலாம் என முடிவுசெய்து, ஒரு ஆட்டொவில் ஏறி விருதுநகர் பேருந்து நிலையம் வந்தடைந்தோம். அங்கு ஒரு இரண்டு மூன்று பேருந்துதான் இருந்தது. காலை வேளை என்பதால் பஸ் வசதி அந்த அளவிற்கு இல்லையா, இல்லை எப்போதுமே அந்த ஊரில் அப்படித்தான் இருக்குமா என்று தெரியவில்லை. சில நிமிடக் காத்திருத்தலுக்குப்பின், சிவகாசி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பேருந்து ஒன்று வந்தது. அதில் ஏறி, நாங்கள் எடுத்து வந்த எல்லாப் பைகளையும் மேலே உள்ள இடத்தில் வைத்துவிட்டு உட்கார்ந்தோம். இரண்டு நிமிடங்கள் கழித்து அழகாபுரி, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக இராஜபாளையம் செல்லும் இன்னொரு வண்டி வந்தது. இதிலிருந்த ஒரு சிலர் தவிர மற்ற எல்லோரும் இறங்கி அந்த வண்டியில் எறினர். அப்போது விசாரித்தபோதுதான் தெரிந்தது, சிவகாசி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வது என்பது சற்று கூடுதல் நேரம் எடுக்குமென்று. அழகாபுரி வழியாகச் சென்றால் இன்னும் சற்று முன்னரே சென்று விடலாம் என்று தெரிந்துகொண்டேன். நான் வரைந்த திட்டப்படி ஒவ்வொரு நிமிடமும் முக்கியம் என்பதால், எல்லாப் பைகளையும் எடுத்துக்கொண்டு அந்தப் பேருந்துக்கு மாறினோம்.

காலை 5:45 மணியளவில் விருதுநகரிலிருந்து கிளம்பி, ஏழு மணிக்குள்ளாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தோம். அங்கு கோயிலருகிலேயே சோமாலயர் தங்கும் விடுதியில் குளித்துவிட்டு, கோயிலுக்குச் சென்று அருள்மிகு ஆண்டாளையும், ரங்கமன்னாரையும் தரிசித்தோம். தரிசித்துவிட்டு வெளியே வந்தவுடன், ஆண்டாள் கோயிலருகிலேயே அருள்மிகு வடபத்ரசாயி கோயில் இருந்தது. அங்கு செல்லும் வழியில் ஆண்டாள் பிறந்த நந்தவனத்தையும் காண முடிந்தது. அருள்மிகு வடபத்ரசாயி திருக்கோயிலில், அன‌ந்தசயனத்தில் பெருமாள் அருள் பாலித்துக்கொண்டிருந்தார். அதனைக் காண, கண் கோடி வேண்டும். அழகாக படுத்திருக்கும் பெருமாளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது. கோயிலிலுள்ள எல்லா சன்னதிகளையும் தரிசித்துவிட்டு எட்டரை மணிக்கு வெளியே வந்தோம். அங்கிருந்து பேருந்து நிறுத்தத்தினருகிலிருந்த கதிரவன் உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை முடித்தோம். வழக்கமாக சாப்பிடுவதைவிட கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டோம். காரணம், அங்கு பரிமாறப்பட்ட உணவு அவ்வளவு அருமையாக இருந்தது. எதிலுமே குறை சொல்ல முடியாத அளவிளான‌ தரம் அந்த உணவகத்தில் இருந்தது. மிகைப்படுத்திச் சொல்லவில்லை, ஆனால் அங்கு சாப்பிட்ட சிற்றுண்டியின் சுவை இன்னமும் எங்களின் நாவை விட்டு அகலவில்லை. இந்தப் பதிவினைப் படிப்பவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றால், அந்த உணவகத்திற்குச் சென்று அவர்களின் உணவைச் சுவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தரத்திற்கும், சுவைக்கும் நான் பொறுப்பு. அந்த உணவகத்தின் கிளை ஒன்று சென்னையிலுள்ள அண்ணாநகரில் இருப்பதை அவர்களின் மூலம் அறிந்துகொண்டேன். அந்த முகவரியை உங்களிடையே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கதிரவன் உணவகம்
ஏஜி 3/58,
ரிவர் வியூ காலனி,
கே-3 காவல் நிலையம் எதிரில்,
அண்ணா நகர்,
சென்னை - 600 040.














சிற்றுண்டியை முடித்துவிட்டு அருகிலுள்ள கடையில் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பெயர்போன பால்கோவாவை எனது வீட்டிற்கும், அலுவலக நண்பர்களுக்கும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்புவதற்குள்ளாகவே ஒன்பது மணியாகிவிட்டது. அங்கிருந்து இராஜபாளையம், சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறினோம். பேருந்து கூட்டமாகத்தான் இருந்தது. இராஜபாளையம் வந்தவுடன்தான் உட்கார இடம் கிடைத்தது. இராஜபாளையத்திலிருந்து சங்கரன்கோவிலுக்கு ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் பேருந்திலேயே ஒரு குட்டித் தூக்கம் போட்டோம்.

பேருந்து பதினோரு மணிக்கு சங்கரன்கோவில் வந்து சேர்ந்தது. அங்கு இறங்கி அருள்மிகு சங்கரலிங்க சுவாமி திருக்கோயிலுக்குச் சென்றோம். கோயில் பேருந்துநிலையத்திலிருந்து பக்கம்தான் என்பதால் நடந்தே கோயிலுக்குச் சென்றுவிட்டோம். கோயிலுக்குள் நுழையும்போதே அருள்மிகு சௌபாக்கிய விநாயகரை வணங்கிவிட்டு, உள்ளே சென்று அர்ச்சனைச்சீட்டு வாங்கியபோது அதனுடன் சந்தனம் போன்றதொரு கட்டியைக் கொடுத்தார்கள். விசாரித்தபோதுதான் அது புற்றுமண் கட்டி என்று தெரிந்தது. புற்றுமண்ணைப் பற்றி ஏற்கனவே எனது அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சிலர் சொல்லியிருந்தனர். கரையானால் கட்டப்படும் புற்றுமண்ணுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகவும், அது தோல் வியாதி மற்றும் விஷக்கடிகளுக்கு அருமருந்தாகப் பயன்படுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதிலும் சங்கரன்கொவிலிலுள்ள புற்றுமண் இன்னும் விசேஷம் என்று சொல்லியிருந்தனர். இந்த மண்ணைத் தண்ணீரில் குழைத்து காயம் பட்ட இடத்தில் தடவினால் உடனே பலனிருக்கும் என்பதால் என்னுடன் வேலை பார்ப்பவர்கள் சிலர் வரும்போது இந்த மண்ணை எடுத்து வருமாறு கேட்டிருந்தனர்.

இந்தக் கோயிலில் முக்கியமாக மூன்று சன்னதிகள் உள்ளன. முதலில் அருள்மிகு சங்கரலிங்க சுவாமி சன்னதி. இங்கு சிவபெருமான் லிங்க வடிவில் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இருபத்தோராம் தேதி முதல் மூன்று நாட்கள் இந்த லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதாகச் சொல்கின்றனர். அடுத்ததாக, அருள்மிகு சங்கரநாராயண சுவாமி. சைவமும் வைணவமும் இருவேறு துருவமில்லை என்பதையும், "ஹரியும் சிவனும் ஒன்னு, அறியாதவர் வாயில் மண்ணு" என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையிலும், இந்தச் சன்னதியில் ஹரியும் சிவனும் சரிபாதியாக நின்று அருள் வழங்கிக்கொண்டிருக்கின்றனர். இங்கு இறைவனை வணங்கிவிட்டு, அருள்மிகு கோமதி அம்பாள் சன்னதிக்குச் சென்று இறைவியை வணங்கினோம். இந்த மூன்று சன்னதிகளும் தனித்தனிப் பிரகாரங்களாக அமைக்கப் பட்டிருந்தன. அம்பாளின் சன்னதிக்குப் பக்கத்திலேயே புற்று இருந்தது. அந்தப் புற்றிலிருந்து கொஞ்சம் மண்ணை ஒரு தாளில் எடுத்துக் கொண்டேன்.

அந்தக் கோயிலில் பூலித்தேவன் பதுங்கிய குகை ஒன்று உள்ளது. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலில் போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுகு காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை, சங்கரன்கோவிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்தபோது, வஞ்சகமாகச் சுற்றி வளைத்து பிடிக்க முயற்சித்தது ஆங்கிலேயப்படை. ஆனால் அவனோ இந்தக் குகைக்குள் சென்று இறைவனை நினைத்து வழிபட்டான். அதன்பின் அவன் எதிரிகளிடமும் சிக்கவில்லை, என்ன ஆனான் என்று தெரியவுமில்லை. இந்தக் குகையைப் பற்றி எங்களின் பயணத்திற்கு முன்னதாகவே என்னிடம் சொல்லியிருந்தனர். நாங்களும் அந்த‌ இடத்திற்குச் சென்று அந்தக் குகையைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் அந்த ஞாபகமில்லாமல் மறந்து போய் பார்க்காமலே வந்துவிட்டோம். இப்போது இந்தக் கட்டுரையை எழுதும்போதுதான் அதுபற்றிய‌ ஞாபகமே வருகிறது. இந்தப் பதிவினைப் படிப்பவர்கள் தவறாமல் பூலித்தேவனின் குகையையும் பார்த்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மற்ற எல்லா சன்னதிகளையும் முடித்துவிட்டு வெளியில் வரும்போது 12:15 மணியாகியிருந்தது. அங்கிருந்து என்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பரின் வீட்டிற்கு ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றோம். எனது நண்பருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருப்பதால், அவரது மனைவி தனது தாயுடன் பிறந்த வீட்டில் இருந்தார். அங்கு சென்று குழந்தையைப் பார்த்துப் பூரித்தோம். குழந்தையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. அங்கு அவர்கள் கொடுத்த சில பலகாரங்களைச் சாப்பிட்டுவிட்டு தென்காசி பக்கத்தில் பாவூர்சத்திரத்திலுள்ள எங்களின் சித்தி வீட்டிற்குப் புறப்பட்டோம்.

சங்கரன்கோவிலிலிருந்து பாவூர்சத்திரத்திற்கு இரண்டு வழியில் செல்லலாம். ஒன்று, தென்காசிக்குச் சென்று அங்கிருந்து பாவூர்சத்திரம் செல்லலாம். அல்லது, சுரண்டை என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்தும் பாவூர்சத்திரம் செல்லலாம். இரண்டாவதாக சொன்ன வழியில் நாங்கள் செல்ல முடிவு செய்தோம். ஏனென்றால், அந்த வழியாகச் செல்வது சற்று தூரம் குறைவு என்பதால் சீக்கிரமே பாவூர்சத்திரம் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் சங்கரன்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து சுரண்டைக்குச் செல்லும் பேருந்தில் ஏறினோம். சித்தி வீட்டிற்குச் சென்று மதிய உணவை முடித்துவிட்டு, உடனே பாபநாசம் செல்வதாக முடிவு செய்திருந்தோம். பாபநாசத்திலுள்ள அகத்தியர் அருவிக்கு ஐந்து மணிக்குள் சென்றாக வேண்டும் என்பதையும் நினைவில் வைத்திருந்தோம். ஏனெனில் அதற்கு மேல் அங்கு செல்ல அனுமதி கிடையாது. சுரண்டை பேருந்து நிலையத்தை வந்தடைவதற்குள்ளாகவே மூன்று மணியைத் தாண்டியிருந்தது. சுரண்டையிலிருந்து பாவூருக்கு நிறைய பேருந்து உள்ளது என்றும், பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி கிடைக்கும் என்றும் சொன்னார்கள். எங்களின் போறாத நேரம், அவர்களின் வார்த்தையை நம்பி அங்கேயே கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்தும் ஒரு வண்டி கூட வருவதாகத் தெரியவில்லை. இப்படியே காத்துக்கொண்டிருந்தால் அகத்தியர் அருவிக்குச் செல்ல வாய்ப்பே கிடையாது என்று புரிந்தது. பேருந்து நிலையத்திற்கு வெளியே சென்று ஒரு ஆட்டோக்காரரிடம் பாவூருக்கு எவ்வளவு ஆகுமென்று விசாரித்தேன். அவன் சற்றும் தயக்கமின்றி நூறு ரூபாய் என்றான். அவனிடம் எவ்வளவோ பேரம் பேசியும் கொஞ்சம் கூடக் குறைப்பதாகத் தெரியவில்லை. அங்கிருந்த வேறு சில ஆட்டோக்காரர்களிடமும் விசாரித்தேன். அவர்களுக்குள் ஒரு சங்கம் வைத்து விலையை முடிவு செய்திருப்பார்கள் போல ... ?!!! விசாரித்த அனைத்து ஆட்டோக்காரர்களிடமும் ஒரே விலை மட்டுமே பதிலாக வந்தது. ஒருவர் கூட குறைப்பதற்கு முன் வரவில்லை. வேறுவழியின்றி முதலில் பேசிய ஆட்டோக்காரரிடமே நூறு ருபாய் கொடுத்து பாவூருக்குப் புறப்பட்டோம். செல்லும் வழியில்தான் தெரிந்தது, பாவூரிலிருந்து பாபநாசம் செல்வதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகுமென்று !!! நாங்கள் எப்படியும் அகத்தியர் அருவியில் குளித்துவிட வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தோம். பாவூரிலுள்ள சித்தி வீட்டிற்குச் சென்று உணவருந்திவிட்டுப் பின்பு பாபநாசத்துக்குச் சென்றால் கண்டிப்பாக நேரமாகிவிடும் என்பதை உணர்தோம். அதனால் பாவூரிலேயே ஏதாவது ஒரு வண்டியை வாடகைக்கு எடுத்து பாபநாசம் செல்வதாக முடிவெடுத்தோம்.

சரியாக நான்கு மணிக்கு பாவூருக்கு வந்தோம். அங்கு கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாடகைக் கார்களில் ஒரு அம்பாசிடர் காரைத் தேர்ந்தெடுத்தோம். அதில் பாபநாசம் சென்று, அங்கிருந்து தென்காசிக்கு வந்து, பிறகு குற்றாலத்திற்குச் சென்று, அங்கிருந்து மீண்டும் பாவூருக்கு வருவதற்கு வாடகையை விசாரித்தோம். ஆயிரத்துநூறு ரூபாய் என்றார்கள். கேட்டவுடன் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஒருவழியாக பேரம் பேசி, ஓட்டுனரின் படியையும் (ஆங்கிலத்தில் 'பேட்டா' என்று சொல்வார்கள்) சேர்த்து எண்ணூறு ருபாய் என பேசி முடித்து, பாபநாசத்திற்குப் புறப்பட்டோம். நான் மேலே சொன்ன வழி சற்று சுற்றுதான், ஏனெனில் முதலில் பாபநாசத்திலிருந்து தென்காசி வருகிறோம், பிறகு அங்கிருந்து குற்றாலத்திற்குச் சென்று, பிறகு மீண்டும் தென்காசி வழியாகவே பாவூருக்கு வரவேண்டும். இவ்வளவு தெரிந்திருந்தும் பிறகு ஏன் இப்படித் தேவையில்லாமல் சுற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கலாம் ... தென்காசிக்கு முன்னதாகவே வருவதற்குக் காரணம், அங்குள்ள அருள்மிகு காசி விசுவநாதர் கோயிலில் எட்டு மணிக்கே நடையை மூடி விடுவார்கள் என்பதால்தான். மதியம் சாப்பிடாததால் எல்லோருக்குமே பசி வயிற்றைக் கிள்ளியது. அவ்வளவு நேரமாகியும் ஓரளவுக்கு எங்களால் பசியைத் தாங்க முடிந்ததற்குக் காரணம், காலை நாங்கள் கதிரவன் உணவகத்தில் நன்றாகச் சாப்பிட்ட சிற்றுண்டிதான். பாபநாசம் செல்லும் வழியில், கடையம் என்னும் ஊரில், வண்டியை நிறுத்தி சாப்பிடுவதற்கு பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் பழங்கள் என வாங்கிக்கொண்டோம். கிட்டத்தட்ட அன்று நாங்கள் எல்லோரும் ஒரு துறவிகளைப் போலத்தான் சென்றுகொண்டிருந்தோம். எவ்வளவோ அடித்துப் பிடித்து ஒட்டியும் பாபநாசம் வருவதற்குள்ளாகவே ஐந்து மணியைத் தாண்டிவிட்டது.

சரியாக மாலை 5:10க்கு பாபநாசம் சோதனைச் சாவடிக்கு வண்டி சென்று நின்றது. அங்கிருந்த ஒரு காவலர் எங்களின் வண்டியைப் பார்த்ததும் திரும்பிச் செல்லுமாறு கையசைத்தார். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தது வீணாகிவிட்டதே என்று மனம் லேசாக சஞ்சலப்பட்டது. அப்போதுதான் என்னுடன் பணியாற்றும் எனது நண்பர் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. எனது நண்பரின் சொந்தக்காரர் ஒருவர் வனச்சரகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றுவதாகவும், தேவைப்பட்டால் இம்மாதிரியான இக்கட்டான நிலைகளில் தன்னை அழைக்குமாறும் எனது நண்பர் கூறியது நினைவுக்கு வந்தது. சற்றும் தாமதமின்றி எனது நண்பரை கைப்பேசியில் அழைத்து அந்தக் காவலரிடம் பேசச் சொல்லி கொடுத்தேன். என்ன ஒரு ஆச்சர்யம் ... சில நிமிட உரையாடலுக்குப் பின் அந்தக் காவலர் எங்களை உள்ளே செல்லுமாறு கூறி தடுப்பை விலக்கினார். எனது நண்பருக்கும், அந்தக் காவலருக்கும் ஒரு சேர நன்றியைக் கூறிவிட்டு, அகத்தியர் அருவிக்கு விரைந்தோம். பாவங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடம் என்பதால் இந்த இடம் பாபநாசம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அமைந்துள்ள இந்த அருவிக்கு பல நோய்களைப் போக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அருவிக்குச் செல்வதற்குள்ளாகவே மழை வலுவாகப் பிடித்தது. அருவியில் நனைவதற்குள்ளாகவே, முழுவதுமாக மழையில் நனைந்து விட்டோம். நேரம் ஆகிவிட்டதால் எங்களைத் தவிர ஒரு ஐந்தாறு பேர் மட்டுமே அங்கு குளித்துக்கொண்டிருந்தனர். பிறகு அருவியில் சற்று நேரம் நீராடிவிட்டு, பாபநாசத்திலுள்ள அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயிலுக்குக் கிளம்பினோம். எனது நண்பரின் உதவியால்தான் எங்களால் அன்று அகத்தியர் அருவிக்குச் செல்ல முடிந்தது. இந்தப் பயணக் கட்டுரையின் மூலமாக மீண்டுமொருமுறை அவருக்கு எங்களின் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

கோயிலுக்கு வருவதற்குள்ளாக மீண்டும் மழை வலுவாகப் பெய்தது. விடாது பெய்த அடைமழையால் காரை விட்டு எங்களால் இறங்கக் கூட முடியவில்லை. பெரிதாக மின்னிய மின்னலால், கோயிலிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் இருந்த இடமே கும்மிருட்டாக இருந்தது. நாங்கள் காரை விட்டு இறங்காமல் உள்ளேயே அதில் பொருத்தப்பட்டிருக்கும் சிறு விளக்கின் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தோம். நேரம் செல்லச் செல்ல, மனம் சற்று பதைபதைக்க ஆரம்பித்தது. காரணம், இங்கிருந்து கிளம்பி அடுத்தது தென்காசியிலுள்ள அருள்மிகு காசிவிசுவநாதர் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். அந்தக் கோயிலில், எட்டிலிருந்து எட்டரை மணிக்குள் நடையை மூடிவிடுவார்கள் என்பதால் அதற்குள் எப்படியாவது சென்றாக வேண்டுமே என்ற பதட்டத்தில் இருந்தோம். சில நிமிடங்கள் கழித்து கோயிலில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின, இருந்தாலும் காரை விட்டு இறங்க முடியாதபடி மழை பெய்துகொண்டுதான் இருந்தது. இருந்தாலும் வேறு வழியின்றி, சற்று நனைந்தாலும் பரவாயில்லையென, காரை விட்டு இறங்கி கோயிலுக்குள் ஓடிச் சென்றோம். கோயிலின் மூலவர் அருள்மிகு பாபநாசநாதர் லிங்க வடிவில் அருளிக் கொண்டிருந்தார். இத்தலத்தின் அம்பாள் அருள்மிகு உலகம்மை. புராண காலத்தில், அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று விட்டான். அதனால் அவனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், பாபநாச தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கியதால் இத்தலத்துச் சிவனை 'பாபநாசநாதர்' என்கின்றனர். இத்தலத்திற்கு 'இந்திரகீழ க்ஷேத்திரம்' என்ற பெயரும் இருக்கிறது. இத்தலத்தைப் பற்றிய இன்னொரு புராண நிகழ்வும் உள்ளது. கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். பிறகு, தனது திருமணக் காட்சியைப் பார்க்காத அகத்தியருக்கு, சித்திரை மாதப்பிறப்பன்று தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும், அவர் மனைவி லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.

தரிசனத்தை முடித்துவிட்டு பாபநாசத்திலிருந்து மாலை 6:45 மணிக்குப் புறப்பட்டோம். அங்கிருந்து விரட்டிச் சென்றதில் சரியாக எட்டு மணிக்கு தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் கோயிலில் இருந்தோம். நடை சாத்துவதற்குள்ளாக கோயிலிலுள்ள எல்லா சன்னதிகளுக்கும் சென்று தரிசித்துவிட வேண்டுமென்ற முடிவில் கோயிலுக்குள் விரைந்தோம். 1924ஆம் ஆண்டு பேரிடி ஒன்று தாக்கியதில் இந்தக் கோயிலின் கோபுரம் தகர்ந்து விழுந்தது. அதன்பின்னர் சமீபத்தில் 1990ல் 168 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது. இத்தலத்தின் வரலாறு என்னவென்றால், சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு பராக்கிரம பாண்டியன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோயில் அமைத்து வழிபடும்படி கூறினார். அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோயில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி மன்னனும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பகவனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோயில் கட்டி வழிபட்டான். பதட்டத்துடனேயே கோயிலினுள் சென்று அருள்மிகு காசிவிசுவநாதர் சன்னதிக்குச் சென்ற எங்களுக்கு பேரானந்தம் அளிக்கும் வகையில் அப்போதுதான் கைலாயநாதனுக்கு அபிஷேகம் தொடங்கியது. அந்த எல்லையில்லாப் பேரானந்தம் அளிக்கும் காட்சியைப் பார்த்து பிறவிப் பயனடைந்தோம். ஈசனின் அபிஷேகக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே மெய்மறந்து இறைவனுடன் இரண்டறக் கலந்ததுபோல் உணர்ந்தோம். பிறகு அங்குள்ள அம்பாள் அருள்மிகு உலகம்மனை தரிசித்துவிட்டு வெளியே வந்த பிறகுதான் ஓரளவிற்கு நிம்மதியாக இருந்தது.

என்னுடைய திட்டப்படி அன்று நாங்கள் செல்ல வேண்டிய எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டோம். இன்னும் குற்றாலம் மட்டும் பாக்கியிருந்தது. குற்றாலத்தில் குளித்துவிட்டு அங்குள்ள அருள்மிகு குற்றாலநாதரை தரிசிக்க வேண்டுமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது. தென்காசியிலிருந்து அடுத்ததாக குற்றாலத்திலுள்ள பெரிய அருவிக்குச் சென்று அங்கு ஒரு குளியல் போட்டோம். குற்றால அருவியைப் பற்றி புதிதாக எதுவும் சொல்ல வேண்டியதில்லை ... அதன் புகழும், அதனுடைய மருத்துவ குணங்கள் நிறைந்த நீரும், அனைவரும் அறிந்ததே ... !!! நாங்கள் சென்ற நேரத்தில் சுத்தமாகக் கூட்டமே இல்லாமல் இருந்தது. இங்கும் கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் மட்டுமே குளித்துக்கொண்டிருந்தனர். அருவியில் தண்ணீர் சீராக வந்ததால் நன்றாக குளிக்க முடிந்தது.

குளித்துமுடித்துவிட்டு பாவூரிலுள்ள எங்களின் சித்தி வீட்டிற்குச் சென்றோம். அங்கு செல்வதற்குள் இரவு மணி பத்தரை ஆகியிருந்தது. நாங்கள் அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது, எங்களின் மதிய வருகையை எண்ணி அவர்கள் சிலவற்றை திட்டமிட்டிருந்தது. நாங்கள் அங்கு மதியம் வந்தபிறகு, எல்லோருமாக சேர்ந்து குற்றாலத்திற்குச் சென்று வர திட்டமிட்டிருந்ததாகக் கூறினர். அவற்றைப்பற்றி இனிமேல் பேசி என்ன பிரயோஜனம் ... !!! ஒரு பெரிய இடைவெளிக்குப் பின், அன்றிரவு அவர்களின் வீட்டில் சாப்பாட்டைப் பார்த்தபோது அமிர்தமாகத் தோன்றியது. நன்றாக சாப்பிட்டோம். சித்தப்பா மறுநாள் வெளியூர் செல்வதாக இருந்ததால், சித்தியையும் எங்களுடன் கோயில்களுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தோம். பிறகு கொஞ்ச நேரம் அவர்களிடம் பேசிவிட்டு, அடுத்த நாள் அதிகாலை சீக்கிரம் எழுவதற்கு அலாரம் வைத்துவிட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு படுக்கைக்குச் சென்று கண்ணயர்ந்தோம்.


அடுத்த பாகம் விரைவில் ... பயணம் தொடரும் ...

5 comments:

Unknown said...

Arumayana Urainadai

karthikeyan pandian said...

mihavum neelamaha ullathu ... ivaalavu edathuku sendrathu nandru

வி.ல.நாராயணசுவாமி said...

தங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி திரு.திலீப் அவர்களே ...

வி.ல.நாராயணசுவாமி said...

திரு கார்த்திகேயன் பாண்டியன் அவர்களுக்கு,

முதலில் பின்னூட்டம் இட்டதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ... ! கட்டுரையை சற்று பெரிதாகத்தான் எழுதியுள்ளேன். அதற்குக் காரணம், இந்தக் கட்டுரையைச் சில வருடங்களுக்குப் பின் படிக்கும்போதும், நாங்கள் சென்று வந்த அனுபவங்களும், அந்த நினைவுகளும் மனத்திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதால்தான். அதுமட்டுமில்லாமல், இந்தக் கட்டுரையைப் படிக்கும் இனிய வாசகர்களுக்கும், எங்களுடன் சேர்ந்து பயணம் செய்த அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்ட முயற்சிதான், இவ்வளவு நீளமான கட்டுரை. இனிவரும் பதிவுகளில், தங்களின் ஆலோசனையையும் கருத்தில் கொள்கிறேன்.

Anonymous said...

one you missed in kanyalumari

Try to meet/talk to ayya.. see the videos..

He gives திருவடி தீக்ஷை.


திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo



Online Books
http://www.vallalyaar.com/?p=409



http://sagakalvi.blogspot.com/


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி

Post a Comment